சொத்தை அபகரித்து தாய், தந்தையை வெளியே துரத்திய மகன்; வீட்டின் முன் கண்ணீருடன் காத்துக்கிடக்கும் பெற்றோர்..!! - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 3 April 2023

சொத்தை அபகரித்து தாய், தந்தையை வெளியே துரத்திய மகன்; வீட்டின் முன் கண்ணீருடன் காத்துக்கிடக்கும் பெற்றோர்..!!


சொத்தை அபகரித்து தாய், தந்தையை வெளியே துரத்திய மகன்; வீட்டின் முன் கண்ணீருடன் காத்துக்கிடக்கும் பெற்றோர்..!! 


விழுப்புரம் மாவட்டத்தில் சொத்தை அபகரித்துக் கொண்டு தாய், தந்தையை வீட்டை விட்டு வெளியே துரத்திய மகனின் செயல் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


சொத்தை அபகரித்து தாய், தந்தையை வெளியே துரத்திய மகன்:


விழுப்புரம் மாவட்டம் மாத்தூரில் தாய், தந்தையிடமிருந்து சொத்தை அபகரித்துகொண்ட மகன், அவர்களை வீட்டைவிட்டு வெளியேற்றி பூட்டிச் சென்றதால், கடந்த ஒரு வாரமாக வயதான தம்பதியனர் வீட்டு வாசலில் சட்டப் போராட்டம் நடத்தி வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் மாத்தூரைச் சேர்ந்த விவசாயி மாரிமுத்து (69). இவரது முதல் மனைவி இறந்த நிலையில், மனைவியின் தங்கையான லட்சுமியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார், இவரின் முதல் மனைவிக்கு கோவிந்தராஜ் (42), வெங்கடேஷ் (40) என்ற இரண்டு மகன்களும், இரண்டாவது மனைவிக்கு சங்கரி (35) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு இரண்டு மகன்கள் மற்றும் மகளுக்கு தனது விவசாய நிலத்தை பாகப்பிரிவினை செய்து எழுதி வைத்தார் மாரிமுத்து.


இதில் தாங்கள் வசித்து வந்த வீட்டை, இளைய மகன் வெங்கடேஷ் சேர்த்து எழுதி கொண்டுள்ளார். பின்னர் 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட வெங்கடேஷ் 2017 ஆம் ஆண்டு வயதான பெற்றோர் இருவரையும் அடித்து துன்புறுத்தி வீட்டைவிட்டு வெளியேற்றி உள்ளார். இதனை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள வாடகை வீட்டில் குடியேறிய வயதான தம்பதியினர், தங்கள் வீட்டை மீட்டுத்தரக்கோரி கோட்டாசியர் மற்றும் காவல்துறையிடம் முறையிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய கோட்டாசியர், வயதான தம்பதியினரை தாங்கள் சாகும் வரை இளைய மகன் வெங்கடேஷ் தன்னுடைய வீட்டில் வைத்து பராமரிக்கவும், மகன் மற்றும் மகள் சேர்ந்து மாதந்தோறும் ரூபாய் 5 ஆயிரம் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டனர்.


இதனை தொடர்ந்து கடந்த வாரம் வாடகை வீட்டிலிருந்து பொருட்களை எடுத்துகொண்டு, மாரிமுத்து தம்பதியினர் இளைய மகன் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது வெங்கடேஷ் இவர்களை வீட்டிற்குள் வரவிடாமல், வீட்டை பூட்டிக்கொண்டு வயதான தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்து தனது மாமியார் வீட்டிற்கு குடி பெயர்ந்துள்ளார். இதனால் செய்வதறியாமல் தவித்து வரும் வயதான தம்பதியினர், கடந்த ஒரு வாரமாக பூட்டிய வீட்டின் வெளியே கட்டில், பீரோ மற்றும் வீட்டு உபயோக பொருட்களுடன் காத்துக்கிடக்கின்றனர்.


வீட்டின் முன்பு கண்ணீருடன் சட்டப் போராட்டம் நடத்தும் பெற்றோர்:


இது தொடர்பாக அவர்கள் கோட்டகுப்பம் ஆய்வாளரிடம் கேட்ட போது அவர் கோட்டாசியரிடம் போய் கேட்க சொல்வதும், கோட்டாசியரிடம் கேட்டால் கோட்டகுப்பம் காவல் நிலையத்தில் கேட்க சொல்வதுமாக இந்த தம்பதியினரை அலைகழித்து வருவதால் இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தங்களது வீட்டை மீட்டு, தாங்கள் உள்ள வரை அங்கு வாழ அரசு வழிவகை செய்து தர வேண்டுமென கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad