நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி ஆகியோர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.சிவ்தாஸ் மீனா, இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி,இ.ஆ.ப., ஆகியோர் தலைமையில், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.நா.புகழேந்தி முன்னிலையில், விழுப்புரம் நகராட்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து இன்று (25.04.2023) ஆய்வு மேற்கொண்டனர்.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், நகராட்சிகள் அனைத்தும், அடிப்படை கட்டமைப்புகளில் உயர் தொழில்நுட்ப வசதிகளோடு அமைந்திட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

அதனடிப்படையில், விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், மகாராஜபுரம் பகுதியில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ், ரூ.148.50 இலட்சம் மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டு வருகிறது. இதில், PPF அறை, Gasifiler Unit, மரம் அருக்கும் அறை, D.G அறை, கழிப்பறை, அலுவலக அறை, நடைபாதை, ஜெனரேட்டர், புகைபோக்கி, வாகனங்கள் நிறுத்துவதற்கான ஷெட் போன்ற அடிப்படை கட்டமைப்புகளுடன் கட்டப்பட்டு வருகிறது. நவீன எரிவாயு தகன மேடை மிகவும் அத்தியாவசியமான அடிப்படை தேவை என்பதால் பணியினை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து, கீழ்ப்பெரும்பாக்கம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பகுதியில் ரூ.250.00 இலட்சம் மதிப்பீட்டில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், பொது வாசிப்பு பகுதி, சிசிடிவி கட்டுப்பாட்டு அறை, சேமிப்பு அறை, ஆண்கள் பொதுவாசிப்பு பகுதி, குழந்தைகளுக்கான செயல்பாட்டு பகுதி, கழிப்பறை, 2 ஸ்மார்ட் வகுப்பு பயிற்சி அறை, 15 எண்ணிக்கையிலான கணினிப்பிரிவு, புல்தரை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, ஜெனரேட்டர் போன்ற அடிப்படை கட்டமைப்புகளுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளதால், விரைவில் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
தொடர்ந்து, விழுப்புரம் நகராட்சியில், தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கத்தின் கீழ், ரூ.120.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில், மருந்தகம், ஆய்வகம், மருத்துவ அலுவலர் அறை, இருப்பு அறை, மருந்து கிடங்கு, கட்டுகட்டும் இடம், கணினி அறை, பணியாளர்கள் அறை, கழிவறை, பேறு கால பின் கவனிப்பு அறை, பிரசவ அறை, தொற்றாநோய் தடுப்பு பிரிவு, 4 எண்ணிக்கையிலான குளிர்சாதன வசதி, ஜெனரேட்டர், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி போன்ற அடிப்படை கட்டமைப்புகளுடன் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகளை நகராட்சி அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து, தரமான கட்டுமானப்பொருட்களை பயன்படுத்தி கட்டுமானம் நடைபெறுவதை உறுதி செய்துகொள்வதுடன், பணியினை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

விழுப்புரம் நகராட்சியில் புதியதாக இணைக்கப்பட்ட 5 ஊராட்சி பகுதிகளில் ரூ.263/- கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 165.686 கி.மீ நீளத்திற்கு கழிவுநீர் குழாய் பதித்தல், 7018 எண்ணிக்கையிலான மனித ஆள் நுழைவு தொட்டி, 3 எண்ணிக்கையிலான பிரதான கழிவு நீரேற்று நிலையம், 7 எண்ணிக்கையிலான கழிவுநீர் உந்து நிலையம், 7 எண்ணிக்கையிலான கழிவுநீர் உந்து மனித ஆள்நுழைவு தொட்டி, 17 எண்ணிக்கையிலான பம்ப் ஹவுஸ், 17.90 கி.மீ நீளத்திற்கு பம்பிங் மெயின், 14,150 வீட்டு இணைப்புகள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதிக மக்கள் தொகை பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் மிக இன்றியமையததாகும். எனவே, பணிகளை விரைந்து மேற்கொள்வதோடு, பணிகள் நடைபெறும் பொழுது பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையிலும், பணிகள் தரமான முறையில் மேற்கொண்டு விரைந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், நாளைய தினம் விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை புரிந்து விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளார்கள். அதனடிப்படையில், பணிகளின் தன்மை குறித்து இன்றைய தினம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் தெரிவித்தார்.
ஆய்வின்போது, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் திரு.ம.ஜெயச்சந்திரன், விழுப்புரம் நகர்மன்ற தலைவர் திருமதி தமிழ்ச்செல்வி பிரபு, விழுப்புரம் நகராட்சி ஆணையர் திரு.சுரேந்திரஷா உட்பட பலர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment